Psalms 64 (BOITCV)
undefined பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 1 இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்;பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும். 2 கொடியவர்களின் சதியிலிருந்தும்,ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். 3 அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்;தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள். 4 அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்;அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள். 5 தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்;தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்;“நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள். 6 அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து,“நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள்.நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை. 7 ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்;உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள். 8 இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி,அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்;அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள். 9 எல்லா மனிதரும் பயப்படுவார்கள்;இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து,அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள். 10 நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து,அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்;இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!