2 Chronicles 36 (BOITCV)
1 நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவனுடைய தகப்பனின் இடத்திலே அரசனாக்கினார்கள். 2 யோவகாஸ் அரசனானபோது அவனுக்கு இருபத்துமூன்று வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசாண்டான். 3 எகிப்தின் அரசன் அவனை எருசலேமின் அரச பதவியிலிருந்து தள்ளிவிட்டு, யூதா மக்கள்மேல் நூறு தாலந்து வெள்ளியும், ஒரு தாலந்து தங்கமும் வரியாகச் சுமத்தினான். 4 யோவகாஸின் சகோதரன் எலியாக்கீமை எகிப்தின் அரசன், யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான். எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என மாற்றினான். ஆனால் நேகோ எலியாக்கீமின் சகோதரன் யோவாகாஸை எகிப்திற்குக் கொண்டுபோனான். 5 யோயாக்கீம் அரசனானபோது அவனுக்கு இருபத்தைந்து வயது. அவன் எருசலேமில் பதினொரு வருடம் அரசாண்டான், அவன் தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். 6 பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் அவனைத் தாக்கி அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி வெண்கல விலங்கினால் கட்டினான். 7 அத்துடன் நேபுகாத்நேச்சார் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோய் அவற்றை அங்குள்ள தன் கோவிலில் வைத்தான். 8 யோயாக்கீமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த அருவருப்பான செயல்களும், மற்றும் அவனுக்கெதிராகக் காணப்பட்டவையெல்லாம் யூதாவினதும், இஸ்ரயேலினதும் அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய இடத்தில் அவன் மகன் யோயாக்கீன் அரசனானான். 9 யோயாக்கீன் அரசனானபோது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதமும் பத்து நாட்களும் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். 10 மறுவருடத்தில் நேபுகாத்நேச்சார் அரசன் அவனைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பி, அவனையும் அத்துடன் யெகோவாவின் ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரும்படி செய்தான். அவன் யோயாக்கீனின் சிறிய தகப்பனான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான். 11 சிதேக்கியா அரசனானபோது அவன் இருபத்தொரு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமை பதினோருவருடம் அரசாண்டான். 12 அவன் தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். அவன் யெகோவாவினுடைய வார்த்தையை பேசிய இறைவாக்கினன் எரேமியாவுக்கு முன் தன்னைத் தாழ்த்தவில்லை. 13 அத்துடன் இறைவனின் பெயரில் தன்னை ஆணையிடும்படி செய்த அரசன் நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாக அவன் கலகம் செய்தான். அவன் அடங்காதவனாய் தன் இருதயத்தையும் கடினப்படுத்தி, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவினிடத்திற்குத் திரும்பாமல் இருந்தான். 14 மேலும் ஆசாரியர்களின் எல்லாத் தலைவர்களும், மக்களும் அதிகமதிகமாக உண்மையற்றவர்களானார்கள். அவர்கள் பிறநாடுகளின் அருவருப்பான செயல்களைப் பின்பற்றி, யெகோவா எருசலேமில் பரிசுத்தம் பண்ணிய அவருடைய ஆலயத்தை அசுத்தப்படுத்தினார்கள். 15 அவர்களுடைய முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா தனது தூதுவர்களின் மூலம் திரும்பத்திரும்ப அவர்களை எச்சரித்தார். ஏனெனில் அவர் தனது மக்கள்மேலும் தனது இருப்பிடத்தின்மேலும் அனுதாபம் கொண்டிருந்தார். 16 ஆனால் அவர்களோ இறைவனின் தூதுவர்களை ஏளனம் செய்து, அவரது வார்த்தைகளை உதாசீனம் செய்து, அவரது இறைவாக்கினர்களை கேலி செய்தார்கள். அதனால் யெகோவாவின் கோபம் அவரது மக்களுக்கு எதிராக எழும்பியது. அதற்கு பரிகாரம் ஒன்றுமில்லாதிருந்தது. 17 எனவே அவர் அவர்களுக்கு எதிராக பாபிலோனியர்களின் அரசனைக் கொண்டுவந்தார். அவன் பரிசுத்த இடத்தில் அவர்களின் வாலிபரை வாளினால் கொன்றான். வாலிபர்களையோ, இளம்பெண்களையோ, வயதானவர்களையோ, முதியவர்களையோ ஒருவனையும் விட்டுவைக்கவில்லை. இறைவன் அவர்கள் எல்லோரையும் நேபுகாத்நேச்சாரிடம் கையளித்தார். 18 அவன் பெரியதும் சிறியதுமான இறைவனுடைய ஆலயத்தின் எல்லாப் பொருட்களையும், யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்த திரவியங்களையும், அரசனுடைய திரவியங்களையும், அவனுடைய அதிகாரிகளுடைய திரவியங்களையும் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனான். 19 அவர்கள் இறைவனுடைய ஆலயத்திற்கு நெருப்பு வைத்து, எருசலேமின் மதிலை உடைத்துப் போட்டார்கள். அவர்கள் எல்லா அரண்மனைகளையும் எரித்து, அங்குள்ள விலையுயர்ந்த எல்லாவற்றையும் அழித்துப்போட்டார்கள். 20 வாளுக்குத் தப்பி மீதியாயிருந்தவர்களை அவன் பாபிலோனுக்கு நாடுகடத்திச் சென்றான். அவர்கள் பெர்சிய அரசு ஆட்சிக்கு வரும்வரை அவனுக்கும், அவன் மகன்களுக்கும் வேலையாட்களாய் இருந்தார்கள். 21 நாடு தனது ஓய்வை அனுபவித்தது. எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படியாக எழுபது வருடங்கள் பூர்த்தியாகும்வரை, நாடு பாழாய்க் கிடந்த காலமெல்லாம் அது இளைப்பாறியது. 22 பெர்சிய அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படி பெர்சிய அரசனின் இருதயத்தை யெகோவா ஏவினார். அதன்படி அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எங்கும் ஒரு அறிவித்தலைக் கொடுத்து அதை எழுதிவைத்தான். 23 “பெர்சிய அரசன் கோரேஸ் சொல்வது இதுவே:“ ‘பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா பூமியின் அரசுகளையெல்லாம் எனக்குக் கொடுத்து, யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னை நியமித்திருக்கிறார். உங்கள் மத்தியில் இருக்கிற அவருடைய மக்களில் எவனும் புறப்பட்டுப் போகட்டும். அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனுடன் இருப்பாராக.’ ”
In Other Versions
2 Chronicles 36 in the ANTPNG2D
2 Chronicles 36 in the BNTABOOT
2 Chronicles 36 in the BOATCB2
2 Chronicles 36 in the BOGWICC
2 Chronicles 36 in the BOHNTLTAL
2 Chronicles 36 in the BOILNTAP
2 Chronicles 36 in the BOKHWOG
2 Chronicles 36 in the KBT1ETNIK
2 Chronicles 36 in the TBIAOTANT