Proverbs 12 (IRVT)
1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்;கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்;கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். 3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்;நீதிமான்களுடைய வேரோ அசையாது. 4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்;அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்;துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். 6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது;உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்;மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 9 உணவில்லாதவனாக இருந்தும்,தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட,மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்;துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்;வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்;நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி;நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்;ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது;சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். 21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது;துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். 22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்;மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்;சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்;துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை;ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;அந்தப் பாதையில் மரணம் இல்லை.