Psalms 1 (IRVT)
1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.