Proverbs 10 (IRVT)
1 சாலொமோனின் நீதிமொழிகள்:ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;அலப்புகிற மூடனோ விழுவான். 9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;அலப்புகிற மூடன் விழுவான். 11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 12 பகை விரோதங்களை எழுப்பும்;அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;புறங்கூறுகிறவன் மதிகேடன். 19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். 30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.